சிறையில் இருந்து ஜாமீனில் வந்ததும் மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேபிகா (27). அயனாவரம் ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (35) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களது மகள் ஸ்டெபி (6). தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 20ம்தேதி சென்னை மவுண்ட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வைத்து தனது 6 வயது மகளான ஸ்டெபியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சதீஷ் தற்கொலைக்கு முயன்றார்.
சதீஷை காப்பாற்றிய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சதீசுக்கும், அவரது மனைவி ரேபிகாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக குழந்தையை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு சதீஷ் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த நிலையில், சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியில் வந்த சதீஷ், மனைவி ரேபிகா மற்றும் ரேபிகாவின் தங்கை ஆகி யோருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போனில் தினசரி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ரேபிகா, ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் சதீஷை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து சதீஷ் தனது மனைவி மற்றும் அவரது தங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த காரணத்தினால், சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சென்னை மாநகர கமிஷனர் அருணுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்படி சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர ஆணையர் நேற்று உத்தரவிட்டார். தற்போது புழல் சிறையில் உள்ள சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.