சின்னமனூர் அருகே ரெடிமேட் ஆடை நிறுவனத்தில் பயங்கர தீ; ரூ.50 லட்சம் துணிகள், பொருட்கள் நாசம்
சின்னமனூர்: சின்னமனூர் அருகே, ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமாகின. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர், ஓடைப்பட்டி சுக்காங்கல்பட்டியில் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருப்பூர் நிறுவனங்களில் ஆர்டர் எடுத்து ஆடைகள் தயாரித்து அனுப்பி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென கம்பெனியில் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர் தினேசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சின்னமனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில்
நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த துணிகள், 30க்கும் மேற்பட்ட மெஷின்கள், பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இவைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.