ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் ஜார்க்கண்ட்
கோவை: இந்தியாவில், உள்நாட்டு அணிகள் இடையே நடக்கும் முதல் தர கிரிக்கெட் போட்டியான, 91வது ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர், நேற்று துவங்கியது. எலைட் பிரிவில் மொத்தம் 32 அணிகள் மோதுகின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கோவையில் நேற்று துவங்கிய முதலாவது லீக் போட்டியில், ஏ பிரிவில் உள்ள, ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாடு அணி, ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணியின் துவக்க வீரர் ஷிகர் மோகன் 10 ரன்னிலும், பின் களமிறங்கிய குமார் சூரஜ் 3 ரன்னிலும் வீழ்ந்தனர். அவரைத் தொடர்ந்து விராட் சிங் 18, சரண்தீப் சிங் 48, குமார் குஷாக்ரா 11, அனுகுல் ராய் 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். இடையில் வந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கடந்தார். அவருடன் இணை சேர்ந்து அபாரமாக ஆடிய ஷஹில் ராஜ் அரை சதம் கடந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜார்க்கண்ட் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த அணியின் இஷான் கிஷண் 125, ஷஹில் ராஜ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தமிழ்நாடு தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3, சந்திரசேகர் 2 விக்கெட் வீழ்த்தினர்.