ராமேஸ்வரம் - கோவை ரயிலில் போலி டிடிஆர் கைது
மதுரை: ராமேஸ்வரம் - கோவை இடையே திருச்சி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 20ம் தேதி இரவு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தது. ரயிலின் சாதாரண வகுப்பில் ஒரு நபர், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். ரயில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, திருச்சி ரயில்வே கோட்டத்தை சேர்ந்த டிடிஆர் சரவணன் ரயிலில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தார்.
அப்போது பயணிகள் ஏற்கனவே ஒருவர் டிக்கெட்டை சரி பார்த்ததாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், பயணிகள் காட்டிய டிடிஆரிடம் சென்று, அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், திருச்சி ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு பிரிவுக்கும் தகவல் தெரிவித்தார்.
ரயில் மானாமதுரை ரயில் நிலையத்துக்கு வந்ததும் அங்கு தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், காட்டு பரமக்குடி தெளிச்சாத்தநல்லூரை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பதும், போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.