மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: ஆக.15ல் உண்ணாவிரதம், 19ல் ரயில் மறியல்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று துவக்கினர். வரும் 15ம் தேதி உண்ணாவிரதம், 19ம் தேதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. மீனவர்களுக்கு கடும் சிறை தண்டனை விதித்து படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. கடந்த 9ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இலங்கை வசம் உள்ள 49 மீனவர்கள், 9 படகுகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து, ரூ.4 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், தங்கச்சிமடத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், ஆக. 15ம் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம், 19ம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்தால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.