12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
ராமேஸ்வரம்: 12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் கடந்த 11 நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கடந்த 19ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர். மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் 12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.