ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு: நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருப்பதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படை சிறைபிடிப்பது, தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகிவருகிறது. மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகளையும், 57 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 9-வது நாளாக நீடித்துவருகிறது. அது மட்டுமின்றி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஒன்றிய அரசை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதன் காரணமாக தங்கச்சிமடம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர். தடுப்பு பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.