ராமேஸ்வரம் மீனவர்கள் 7பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!!
ராமநாதபுரம்: ஆக.9ல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட நிலையில், அனவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி முன் 7 மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் 7பேர் மீதும் மன்னார் மீன்வளத்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 6 மீனவர்களுக்கு ரூ.87,000 அபராதம் விதித்தார். மேலும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு மீனவருக்கு ரூ.14,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை மீனவர்கள் செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகுக்கான விசாரணை வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.