ராமநாதபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் மர்மநபர்களால் சூறை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் காங்கிரஸ் அலுவலகம் மர்ம கும்பலால் சூறையாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துக்களை பாதுகாத்திடும் விதமாக, சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தலைவர் தங்கபாலு தலைமையிலான குழுவினர், கடந்த ஜூலை 28ம் தேதி ராமநாதபுரம், பரமக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். அக்குழு பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு, அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே 16 சென்ட் இடத்தில் உள்ள கட்டிடத்தில் திருவாடானை காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் தலைமையில், மாவட்ட, நகர நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அந்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கான பலகையை வைத்து கட்சிக்கொடியை பறக்க விட்டனர். நேற்று அதிகாலை பூட்டப்பட்டிருந்த ராமநாதபுரம் தாலுகா நகர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள், செக்யூரிட்டியை விரட்டி விட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று மது அருந்தியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த சேர்களை உடைத்தும், பேனர்கள் அனைத்தையும் கிழித்து, அலுவலக பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்றி, ஆங்காங்கே எலுமிச்சம்பழங்களை வைத்து விட்டு சென்றுள்ளனர். அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் மற்றும் நிர்வாகிகளை மர்ம நபர்கள் தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலின்பேரில் வந்த கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், நகர தலைவர் கோபி புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.