ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கிறது ஓஎன்ஜிசி
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கிறது ஓஎன்ஜிசி. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது. ரூ.675 கோடி செலவில் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நடவடிக்கை. 2,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் அனுமதியே இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது பாஜக அரசு. இன்னும் 7 மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக அரசு களமிறங்கி உள்ளதாக தெரிகிறது. முன்னதாக நேற்று சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடல் பகுதிகளில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறும்பனை மீனவ கிராம மக்கள் கொளுத்தும் வெயிலில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன் கோட்டை தனிச்சியம், பேய்குளம், கீழ்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட 20கிராமங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்த நிலையில், மாநில அரசு இதுகுறித்து முடிவெடுக்காத சூழலில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.