ரஜினிக்கு பிடிக்கும் வரை கதைகளை கேட்போம்: சுந்தர் சி. விலகியது பற்றி கமல்ஹாசன் பேட்டி
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி நேற்று பகல் 11.45 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள். நாம் அந்த வெற்றி நேர்மையாக வந்தா என்றுதான் பார்க்க வேண்டும். அது மாபெரும் வெற்றிதான்.
வெற்றியாளர்களின் சந்தோஷம் அது. அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்றுதான் நாம் ஆராய
வேண்டும். எஸ்ஐஆர் குறித்து அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். என்னால் முடிந்தவரை நான் உதவி செய்கிறேன். உங்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. நீங்களும் சேர்ந்து, அதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து, இயக்குனர் சுந்தர் சி விலகியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். எனது கருத்து என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான், எனக்கு ஆரோக்கியமானது. அதை தான் தற்போது, பண்ணியுள்ளோம். ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம்.
புதிய இயக்குனர்களுக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது. கதை நல்லா இருக்க வேண்டும், அவ்வளவுதான். நானும் ரஜினிகாந்தும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
* விஜய்க்கு கமல் ‘நச்’ பதில்
மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் ‘‘புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட, திமுகவை எதிரி என்கின்றரே’’ என நிருபர்கள் கேட்டபோது, ‘‘இலக்கை உயர்வாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக நடிக்க வேண்டும் என்று சொன்னால், இருப்பவர்களில் சிறந்த நடிகர் போல் எனது பிள்ளை வரவேண்டும் என்று நினைப்பார்கள்.
ஏழையாக இருப்பவர்களும் தனது பிள்ளையை மகராசன் என்றுதான் கொஞ்சுவார்கள். ஆசை அனைவருக்கும் இருக்கும்’’ என்றார். ‘‘2026 தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி என்று விஜய் கூறியுள்ளாரே’’ என கேட்டபோது, ‘‘அது வெறும் பார்வை தான். ஆனால் வாக்கு மக்களுடையது’’ என பதில் அளித்தார்.