ராஜஸ்தானில் துயரம் ஓடும் பேருந்தில் தீ 20 பேர் உயிரிழப்பு: 16 பேர் படுகாயம்
ஜெய்சால்மர்: ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் ஓடும் பேருந்தில் தீப்பிடித்து 20 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது.
ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. பயணிகள் அலறியடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். ஆனபோதும் 20 பேர் தீப்பிடித்து உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், மருத்துவக்குழுவினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறிய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்துக்கு, தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.