ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு பூங்கா வளாகத்தை சுற்றி முழுவீச்சில் தூய்மைப்பணி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் சோழன் சிலை பகுதியில் உள்ள ராஜராஜன் சிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது வருகிறது.தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவையாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சதய விழா வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) தஞ்சை பெரியகோவிலில் தொடங்குகிறது.
விழாவின் முக்கியநிகழ்வாக 1ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சை பெரியகோவில் அருகே பூங்காவில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ராஜராஜசோழன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
இதையொட்டி நேற்று ராஜராஜசோழன் சிலை சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மாலை அணிவிப்பதற்கு வசதியாக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூங்கா வளாகத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். புற்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.பூங்கா வளாகத்தில் கிடந்த குப்பைகளையும் அள்ளினர். மேலும் பூங்கா வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.