தமிழ்நாட்டில் இன்று முதல் மழை பெய்யும்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகப்பட்சமாக பெருஞ்சாணி அணை, புத்தன் அணை பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.