மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: குமரிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
குறிப்பாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், ஆற்று பாய்ச்சல்கள் அதிகரித்து, பல இடங்களில் தாழ்வான பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஒருநாள் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு தொடர்பாக 1077, 0462 250 1070, 97865 66111 ஆகிய அவசர எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என நெல்லை ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (நவ.24) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.