மழை நீரில் மூழ்கிய பயிர்கள் விவசாயிகளுக்கு நிவாரணம் பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஆவன செய்ய வேண்டும். தேங்கியுள்ள நீரில் பயிர்களின் வேர்கள் அழுகுவதுடன் வளர்ச்சி தடைப்பட்டு பயிர்கள் சேதமடைவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
மேலும் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். எனவே விவசாய மக்களுக்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு பயிர் இழப்பீட்டுக்கான தொகையை வழங்கி, அவர்களை இந்த இன்னலிலிருந்து காப்பாற்ற வேண்டி ஒன்றிய, மாநில அரசை தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.