மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் குன்னூர் மலை ரயில் சேவை ரத்து!
நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குன்னூர் , சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 137 மிமீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கெத்தை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - மஞ்சூர் இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குன்னூர் - கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.