தொடரும் உண்ணாவிரத போராட்டம்; சசிகாந்த் செந்திலிடம் போனில் ராகுல் காந்தி நலம் விசாரித்தார்: முத்தரசன், துரை வைகோ நேரில் ஆதரவு
சென்னை: தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த 29ம்தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் சசிகாந்த் செந்திலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, சசிகாந்த் செந்திலை, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘மாணவர்களின் கல்வி நலனுக்காக உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஒன்றிய பாஜவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது. அதனால் உடல்நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.