தகுதித்தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆசிரியர்களை அரசு கைவிடாது: அமைச்சரிடம் முதல்வர் உறுதி
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பேசினார். அப்போது, 2011ம் ஆண்டிற்கு முன் பணிநியமனம் பெற்று, தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கும் வகையிலும் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அவர்கள் தெரிவித்த கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவித்தார். மேலும் தொடர் நடவடிக்கை குறித்தும் ஆலோசனை பெற்றார். அப்போது, ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது, மூத்த வழக்கறிஞரும் எம்பியுமான பி.வில்சன் உடனிருந்தார்.
* ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவன தலைவர் அருணன் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்த மறுநாளே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளை கேட்டறிந்து ஒரு ஆசிரியரை கூட்ட அரசு கைவிடாது என சூளுரைத்தார். உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்து மன உளைச்சலில் இருந்த ஆசிரியர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
மறு சீராய்வு தாக்கல் செய்யப்பட்டது சட்ட போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தீர்ப்பின் நிலை எவ்வாறு இருக்கும் தெரியாது, ஆதலால் சிறப்பு தகுதி தேர்வு குறித்து மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் அனைத்து சங்க நிர்வாகிகளின் ஆலோசனை பெற்றார். மேலும் மூத்த வழக்கறிஞர் வில்சனை அழைத்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கினார். முதல்வர் முழுவதுமாக கேட்டறிந்து ஒரு ஆசிரியரை கூட கை விடாது என உறுதி அளித்து கலைஞரின் மறு உருவம் என்பதை பறைசாற்றி உள்ளார். அதோடு டிசம்பர் மாதமே அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிகளையும் டெல்லிக்கு அழைத்து சென்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சந்தித்து முறையிடவும் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.,க்கள் குரல் எழுப்பவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் காவலர் என்பதை நிரூபித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.