புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு: வடகரை, மணலி உள்ளிட்ட கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை
புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு 250 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரிக்கு 2,000 கனஅடி நீர் வரத்து உள்ளது
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,741 மில்லியன் கனஅடிக்கு நீர் உள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.65 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 556 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
புழல் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பு - எச்சரிக்கை
புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று கலக்கிறது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும்போது, உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.