மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா துவக்கம்: 12ம் தேதி தேரோட்டம்
திருவொற்றியூர்: மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் புரட்டாசி திருவிழா 10 நாட்களுக்கு மிக விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு விழாவை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாம கொடியை அய்யாவின் பக்தர்கள் கையில் ஏந்தியபடி பள்ளியறையை 5 முறையும், கொடிமரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி வலம் வந்தனர். பின்னர் பதிவலம் வந்து, காலை 6.30 மணியளவில் புரட்டாசி திருவிழாவுக்கான திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இன்றிரவு 8 மணியளவில் காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் நாள்தோறும் மாலை திருஏடு வாசிப்பு நடக்கிறது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8ம் நாளான வரும் 11ம் தேதி இரவு 8 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 12ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணியளவில் திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணியளவில் அய்யா திருத்தேரில் வீதியுலா வருகிறார். தேரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், சிவராஜ், வைகுண்டராஜன், ஜெயகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.