தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டம்; ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: பொன்குமார் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய மோடி அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் செயல்படக்கூடிய கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்கள் கலையக்கூடிய பேராபத்து உள்ளது. இந்தச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும். நூறு தொழிலாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொழிற்சங்கம் தொடங்க முடியும் என்பது தொழிற்சங்க உரிமையை மற்றும் தொழிலாளர்களின் உரிமையை மறுப்பதாகும்.
இது தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய அரசு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். இதனை கண்டித்து விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் நாடு தழுவிய மாபெரும் கண்டன போராட்டம் நடத்த உள்ளது. அதன் தொடக்கமாக நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் பொறி.எஸ்.ஜெகதீசன் தலைமை தாங்குகிறார். போராட்டத்தை துவக்கி வைத்து விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் கண்டன உரையாற்றுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.