பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பிரபல பள்ளி காவலாளி கைது
சென்னை: வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி காவலாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இந்து (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி, கல்லூரி ஒன்றில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி வீட்டின் பின்புறம் தனது துணிகளை இந்து துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட நபர் ஒருவர், நைசாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதை பார்த்த இந்து ‘யார் நீங்கள். எதற்காக வீட்டிற்குள் வருகிறீர்கள்,’ என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், நான் கேபிள் டிவி வயர் மாற்ற வந்து இருக்கிறேன், என்ற கூறியுள்ளார். அதனால் இந்து சரி என்று கூறி துணி துவைக்க தொடங்கினார். அப்போது அந்த மர்ம நபர் இந்துவின் பின்புறம் வந்து திடீரென கட்டிப்பிடித்து, மூத்தம் கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத இந்து, உதவி கேட்டு சத்தம் போட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து, அவர் வந்த சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, எம்.ஜி.ஆர்.நகர் அகிலன் தெருவை சேர்ந்த 2 திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் கணேஷ் (44) என்பதும், இவர், கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கணேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.