புரோ கபடி லீக்கில் இன்று தெலுங்கு டைட்டன்ஸ் -அரியானா புனேரி-யு மும்பா மோதல்
சென்னை: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 69வது லீக் போட்டியில் தமிழ்தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதின. இதில் ஆரம்பத்தில் தடுமாறிய தமிழ் தலைவாஸ் பின்னர் அதிரடியாக புள்ளிகளை குவித்து முதல் பாதியில் 30-19 என வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 56-37 என தமிழ்தலைவாஸ் வெற்றிபெற்றது. கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் ரெய்டில் 26 புள்ளிகள் எடுத்தார்.
13வது போட்டியில் தமிழ்தலைவாஸ் 6வது வெற்றியை பெற்றது.தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 33-33 என சமனில் முடிந்தது. தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க டைப் ரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் 9-3 என டெல்லி வெற்றி பெற்றது. 12வது போட்டியில் அந்த அணி 11 வெற்றியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ், இரவு 9 மணிக்கு புனேரி பால்டன்-யு மும்பா மோதுகின்றன.