தன்னை தேர்வு செய்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையரின் நன்றிக்கடன்தான் எஸ்ஐஆர்: சபாநாயகர் அப்பாவு காட்டம்
நெல்லை: தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று அளித்த பேட்டி:அவசர கோலத்தில் வாக்காளர் திருத்த பட்டியல் தயாரிக்க சொல்லியுள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்திய அளவில் தேவையில்லாத விஷயம். பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் 2016 நவ.8ல் ரூ.1000 நோட்டு செல்லாது என்றார். 2021 மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்றார். தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பாரத பிரதமர் தான் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பர். ஆனால் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உரிமை கிடையாது என்றனர்.
இந்த புதிய சட்டப்படி, பிரதமர், அவரது அமைச்சர் அமித்ஷா இருவரும் சேர்ந்து தான் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை தேர்ந்ெதடுத்துள்ளனர். அதற்கு நன்றியாக தேர்தல் ஆணையர் இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்துள்ளார். ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் இந்தியா முழுவதற்கும் கொண்டு வந்து கால அவகாசம் கொடுத்து ஓராண்டு காலம் இந்தப் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று கூறி ஜனநாயக முறையில் நல்ல நோக்கத்தில் செய்வார்கள்.
இது அந்த நோக்கமல்ல. சாமானிய ஏழை, எளிய மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என பிரதமர் நினைத்திருக்கலாம். ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகி விடும். 60 சதவீதம் வாக்காளர்கள் தான் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியும். எஞ்சியுள்ள வாக்காளர்களை இந்த ஜென்மத்தில் சேர்க்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அதில் கஷ்டம் உள்ளது.
முதல் கட்டத்தில் சேர்ப்பவர்கள் தான் வாக்காளர்கள். 7ம் தேதிக்கு பிறகு யாரும் வாக்காளராக சேர முடியாது. கலெக்டர், சப்-கலெக்டர், தாசில்தாரிடம் செல்லுங்கள் என்பார்கள். யாரும் போய் சேர்க்க முடியாது. எனவே எஸ்ஐஆர் என்ற புதிய வாக்காளர் சேர்ப்பு பணி சரியான நடவடிக்கை அல்ல, ஒரு சதிகார செயல். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் ஜனநாயத்தையும் அழிக்கும் செயல்.இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.