பிரதமர் மோடி சீனா பயணம் உறுதி: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்
புதுடெல்லி: சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், ‘‘அஜித் தோவல் தொலைக்காட்சி ஒன்றில் இந்தியா-சீன உறவுகளில் புதிய ஆற்றல் மற்றும் உந்துதல், எல்லையில் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது. சீனாவில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு செல்கிறார்” என்றார்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில் நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனாவின் நகரமான தியான்ஜினுக்கு பயணம் மேற்கொள்வதற்கான முதல் அதிகாரப்பூர்வ உறுதிபடுத்துதல் இதுவாகும். கவலைகள் நிவர்த்தி செய்யப்படும்: சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை திங்களன்று சந்தித்து பேசினார்.
அப்போது இந்திய தரப்பில் இந்தியாவிற்கு உரங்கள் மற்றும் அரிய பூமி கனிமங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இதற்கு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவின் மூன்று முக்கிய கவலைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது இந்தியாவின் உரங்கள், அரிய கனிமங்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகியவற்றின் தேவைகளை சீன நிவர்த்தி செய்வதாக வாங் யீ உறுதி அளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை நிலைநிறுத்தவும், இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் இணைந்து அமைதியான பாதுகாப்பான, வளமான வீட்டை கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.