தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னை: பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் காலமானார். இவர்களது தாய் அம்சவேணிக்கு அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி. பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.