விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலை
நாகை: நாகையில் விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய வாலிபரை வீடியோ எடுத்து மிரட்டியதால் அவர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தவெக நிர்வாகி உள்பட அக்கட்சியினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கரூரில் தவெக தலைவர் விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி ஆண், பெண், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்ல தவெக தலைவர் விஜயோ அக்கட்சியின் மற்ற நிர்வாகிகளோ செல்லவில்லை. இந்நிலையில் நாகை அடுத்த பிரதாபராமபுரத்தில் கரூர் சம்பவத்துக்கு காரணமான தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகளை வேளாங்கண்ணியை சேர்ந்த பரத்ராஜ்(30) என்பவர் ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவெக நிர்வாகிகள், சுவரொட்டி ஒட்டியவரை வீடியோ எடுத்ததுடன் யார் சுவரொட்டியை ஒட்ட சொன்னது என்று கேட்டனர். மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதைதொடர்ந்து கீழையூர் போலீசில் தன்னை மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது பரத்ராஜ் கடந்த 29ம் தேதி புகார் செய்தார். இந்நிலையில் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்று கொட்டகையில் நேற்று முன்தினம் பரத்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி போலீசார் பரத்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து நாகை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, பரத்ராஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்ட தவெக கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உட்பட அந்த கட்சியை சேர்ந்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.