பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எங்கே? கபில் சிபல் கேள்வி
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு பதவியேற்ற துணைஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை மாதம் 22ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்கர் குறித்த எந்த தகவலும் இல்லை. இது குறித்து கபில் சிபல் கூறுகையில்,‘‘ஜூலை 22ம் தேதி ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து இன்று (நேற்று) ஆகஸ்ட் 9 வரை அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் இல்லை. அவரது அரசியல் நண்பர்களாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. லாப்டா லேடீஸ்( திருமணமான பின் மாயமான புதுமணப்பெண் குறித்த பாலிவுட் திரைப்படம்) பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன்.
ஆனால் மாயமான துணை ஜனாதிபதி குறித்து கேள்விபட்டதே இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா? அவர் இருக்கும் இடம் உள்துறை அமைச்சகத்துக்கு தெரியும். அவரது உடல்நிலை சரியில்லாததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.