பூந்தமல்லி அருகே தனியார் உணவு கூடத்தில் கேஸ் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து!!
திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான உணவு கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவு கூடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவுகளை தயாரித்து அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் உணவு கூடத்தில் உணவு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சமையலறையில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அதனைக் கண்டு ஊழியர்கள் அலறடித்து வெளியேறினார்கள். சமையலறையில் இருப்பு வைத்திருந்த மளிகை பொருட்களில் தீ பரவி மளமளவென எறிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.