பூம்புகார் மகளிர் மாநாடு ராமதாஸ் அழைப்பு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பூம்புகாரில் வரும் 10ம்தேதி நடைபெறவுள்ள வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம், குடும்பமாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன். பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், இந்த மகளிர் மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும். கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், வன்னியர் சங்கம் சார்பில், எனது தலைமையில் நடைபெறுகிற இந்த பிரமாண்ட திருவிழாவில் அனைவரையும் பாசத்தோடு வரவேற்கிறேன். மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்கும் ஒரே விழா இது. நம்முடைய வெற்றிகளுக்கான புதிய பாதை குறித்து கூடி பேசி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.