பொன்னை அணைக்கட்டு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
அரக்கோணம்: பொன்னை அணைக்கட்டு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அதிகபட்சமாக 12 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. இதனால், பொன்னை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காலை நிலவரப்படி 6500 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் 3 பிரதான மதகுகள் மூலம் கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் விநாடிக்கு 4249 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பொன்னை ஆற்றின்கரையோரம் உள்ள மக்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை கரையோரத்தில் உள்ள மக்கள் பொன்னை ஆற்று பகுதிகளில் குளிக்கவோ, செல்லவோ, குழந்தைகளை ஆற்றங்கரை ஓரம் அழைத்து செல்ல வேண்டாம் எனவும், நீர்நிலைகள் அருகில் கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்றும், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.