பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்: ரயில் நிலைய கவுன்டர்கள், ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் மும்முரம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரயிலில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் முன்பதிவு என்பது விறுவிறுப்பாக நடந்தது.
ஏனென்றால் ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை, 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து விடுமுறை வருகிறது. 12ம் தேதி ஒரு நாள் லீவு எடுத்தால் போதும். 13ம் தேதி போகிப் பண்டிகை என்பதால் பெரும்பாலான நிறுவனங்களில் விடுமுறை விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வரும் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் உள்ள கவுன்டர்களிலும் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல பெரும்பாலானவர்கள் ஆன்லைனிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி (சனிக்கிழமை) பயணம் செய்பவர்களுக்கான முன்பதிவு இன்றும், ஜனவரி 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்களுக்கான முன்பதிவு வரும் 12ம் தேதியும் தொடங்குகிறது. தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி (திங்கட்கிழமை) பயணம் செய்ய வரும் 13ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
மேலும் பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதி பயணம் செய்வதற்காக வரும் 14ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல பொங்கல் பண்டிகையான ஜனவரி 14ம் தேதிக்கான புக்கிங் நவம்பர் 15ம் தேதியும், ஜனவரி 15ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 16ம் தேதியும், ஜனவரி 16ம் தேதிக்கான புக்கிங் நவம்பர் 17ம் தேதியும், ஜனவரி 17ம் தேதிக்கான புக்கிங் நவம்பர் 18ம் தேதியும், ஜனவரி 18ம் தேதி தேதிக்கான புக்கிங் நவம்பர் 19ம் தேதியும் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட விரும்புவோர் இந்த நாட்களில் திட்டமிட்டு புக்கிங் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் டிக்கெட் கவுன்டர்களில் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும். இரவு 8 மணி இந்த முன்பதிவு என்பது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தொடங்கிய முன்பதிவால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.