பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கொள்குறி வினாக்களின் தொகுப்பு
சென்னை: தொழில்நுட்பக்கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொள்குறிவகை (அப்ஜெக்டிவ் டைப்) வினாக்கள் மூலம் மாணவர்களை பயிற்றுவிப்பது கற்றலின் தரத்தை உயர்த்தும் ஒரு பயனுள்ள முறை இது. இது பாடப்பகுதியை எளிதில் புரிந்துகொள்ளவும், முக்கிய கருத்துகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
இத்தகைய கேள்விகள் மாணவர்களின் சிந்தனைத்திறன், தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் நேரத்தை சரியாக பயன்படுத்தும் திறனையும் வளர்க்கின்றன. மேலும், உடனடி மதிப்பீட்டின் மூலம் மாணவர்கள் தங்கள் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்து முன்னேற்றம் அடைய முடிகிறது.
இதையொட்டி பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் முதலாம் ஆண்டு முதல் பருவம், மற்றும் 2ம் பருவ பாடங்களான தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான கொள்குறி வினாக்களின் தொகுப்பு, வல்லுநர்கள் குழுவை கொண்டு தயாரிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரிகளின் முதவல்வர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.