கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல் அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும்: இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும் என திமுக இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த இளைஞர் அணி, வட்ட, பாக நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
எத்தனையோ பொறுப்புகள் வந்தாலும், சட்டமன்ற உறுப்பினர், விளையாட்டுத் துறை அமைச்சர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர், அதன் பிறகு இப்போது துணை முதலமைச்சர் இப்படி எத்தனையோ பொறுப்புகளுக்கு வந்தாலும் என்னுடைய மனதுக்கு மிகுந்த நெகிழ்ச்சியைத் தருகின்ற நெருக்கமான பொறுப்பு என்றால், அது கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் என்ற இந்த பொறுப்பு மட்டும்தான். முழுக்க முழுக்க உங்களின் பணிகள் மூலமாகத்தான் நீங்கள் இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு பல கட்சிகள், பல இயக்கங்கள் பூத் கமிட்டி போடுவதற்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆள் கிடைக்காமல் மிஸ்டு கால் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பூத்துக்கு ஒரு இளைஞர் அணி அமைப்பாளரை நியமித்துக்கொண்டு இருக்கிற ஒரே இயக்கம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். இளைஞர் அணியில் நீங்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக உழைத்தீர்கள் என்றால், சரியான நேரத்தில் உங்களுக்கான அந்த அங்கீகாரத்தை நம்முடைய தலைவர் நிச்சயம் கொடுப்பார்.
உங்கள் ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் 50, 60 பேரை வைத்திருந்தீர்கள் என்றால், நீங்கள் சொல்கிறவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள், அந்த நிலைமையை உருவாக்கி வைத்திருந்தீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. இல்லந்தோறும் இளைஞர் அணி மூலம் வீடு வீடாக சென்று இளைஞர் அணி உறுப்பினர்களைச் சேர்த்தோம். `ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை, தலைவர் அறிவித்தார். இன்றைக்கு கிட்டத்தட்ட இரண்டு கோடி பேரை கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்திருக்கிறோம் என்றால், அதில் இளைஞர் அணியின் பங்கு மிகமிக முக்கியம், தவிர்க்க முடியாத பணி.
இன்றைக்கு நாம் மிக மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம்தான் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே என்னுடைய மக்கள் சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறேன். வந்திருக்கக்கூடிய இளைஞர் அணி ஒவ்வொருவரும் உங்களுடைய தேர்தல் பணிகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இன்னைக்கு நம் வலிமையைப் பார்த்து பல எதிர்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள். நம் வளர்ச்சி பல பேர் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது. அதனாலதான் புதிதாக வருபவர்கள், ஏற்கனவே இருந்தவர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு தி.மு.க-வை எதிர்க்கிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு, ஏதாவது ஒரு குற்றச்சாட்டை வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நம்மை விமர்சிக்கிறது, அதுவும் இப்ப குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு நான்கு ஐந்து நாட்களாக அவருக்கு நான் மட்டும்தான் தெரிகிறேன். தலைவரையே அவர் மறந்துவிட்டார். தலைவரை கடைசியாதான் நாங்கள் உள்ளே இறக்குவோம். எல்லாரும் களத்துக்கு வர வேண்டும். நீங்கள் உட்பட அத்தனை பேரும் இன்றைக்கு களத்தில் இருக்க வேண்டும். அதுதான் இளைஞர் அணிக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரே பணி. அதுதான் நமக்கு வெற்றியை கொடுக்கும். அதுதான் மக்களின் நம்பிக்கையை, நம் தி.மு.க பக்கம் திருப்பும்.
200 தொகுதிகள் வெற்றிப்பெற வேண்டும் என்று இலக்கு கொடுத்திருக்கிறார்கள். நாம் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்பட்டோம் என்றால், 200 இல்லை 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. அதற்கு ஒரு தொடக்கமாக மயிலாப்பூர், தியாகராய நகர், திருவொற்றியூர் இந்த மூன்று தொகுதியிலும் உதயசூரியன் உதித்துவிட்டான் என்ற செய்தி நமக்கு வரவேண்டும். வெற்றி மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும். வந்திருக்கின்ற உங்கள் அனைவரின் பணிகளும் சிறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கர், ஜெ.கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் மோகன், ரத்னா லோகேஸ்வரன், பகுதி கழகச் செயலாளர் ஏழுமலை, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம், பகுதி கழகச் செயலாளர்கள் நந்தன மதி, முரளி, அருள்தாசன், சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதன்குமார், சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உமாசங்கர், தினேஷ் மாணிக்கம், விக்னேஸ்வரன், அஸ்வின்குமார், பிரகாஷ், வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், மோரை சதீஷ்குமார், கேபிள் கணேசன், இனியன், சமூக வலைதள பயிற்சியாளர் விக்னேஷ் ஆனந்த், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மணிரத்தினம், மணிகண்டன், ஜெகதீஷ், திவான் குமார், சரவணன், அவிநாஷ், ஸ்டாலின், அன்பகம் செந்தில் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.