காவல்துறை பயிற்சியகத்தில் 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!!
சென்னை: வண்டலூர் காவல்துறை பயிற்சியகத்தில் 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இன்று வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
வணிகவரி அலுவலர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் 18.08.2025 முதல் 30.09.2025 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாம், வணிகவரித் துறை செயல்பாடுகள் தொடர்பான சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள், சட்டப்பூர்வ கடமைகள், சமீபத்திய வரிச்சட்டங்கள், வரிச் சேவை மேம்பாட்டுத்திட்டங்கள், அதிநவீன தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, தினந்தோறும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.