காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் விவகாரத்தில் இரண்டு வாரம் கெடு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படுவர்கள் குற்றவாளி என்று உறுதியாகும் முன்னதாகவே மர்மமான முறையில் அங்கேயே இறந்து விடுகிறனர். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,\”சிசிடிவி கேமரா பொருத்தும் விவகாரத்தில் மாவட்ட ரீதியாக குழு அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், காவல் நிலைய மரணங்கள் தொடர்ச்சியாக நடப்பது தொடர்பாக தனியார் செய்தித்தாளில் வெளியான செய்தி அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,\” காவல் நிலையத்தில் சிசிடிவி பொருத்தும் விவகாரம் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அப்போது வழங்கப்பட்டது. ஆனால் அவை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக இந்த உத்தரவுகள் செயல்படுத்த ஆணையிட்டும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக வழக்கு ஏதேனும் நீதிமன்றத்திற்கு வரும் பட்சத்தில் அதுதொடர்பான ஒளிப்பதிவு விவரங்களை கேட்கும் போது அது காணவில்லை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு என காவல்துறை தரப்பில் பல்வேறு காரணங்கள் தான் கூறப்படுகிறது. இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.
கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 11 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது. எனவே, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு, அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றை கட்டாயமாக்கிய உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் நடைமுறைப் படுத்தப்பட்டது குறித்து, காவல் நிலையங்கள், சி.பி.ஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம், தேசிய புலனாய்வு அலுவலகம், டி.ஆர்.ஐ அலுவலகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அலுவலக அதிகாரிகள் அதுதொடர்பான விரிவான விவரங்களை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணைய இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.