கோர்ட் கட்டிடத்தில் இருந்து குதித்து போக்சோ கைதி தப்பி ஓட முயற்சி
*மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு : ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்த டிரைவர் கார்த்தி (37). இவர் மீது பவானி அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கு உள்ளது. அந்தியூர் போலீசில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்தி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார்.
நேற்று வழக்கு விசாரணைக்கு ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை மத்திய சிறையில் இருந்து கார்த்தி, ஈரோடு ஆயுதப்படை போலீசாரால் 12.30 மணியளவில் அழைத்து வரப்பட்டார். மதியம் 3 மணியளவில் வழக்கு விசாரணை முடிந்து கிளம்ப தயாராகினர். அப்போது தப்பியோடும் எண்ணத்தில் நீதிமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து அதாவது 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க அவர் முயற்சித்தார்.
கார்த்தி நடவடிக்கையை பார்த்து உஷாரான ஆயுதப்படை போலீசார், அவரது சட்டையின் பின்புறத்தை பிடித்தனர். அதனையும் மீறி முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் வலதுபுற இடுப்பில் காயம் ஏற்பட்டது. கால்களிலும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதனால் கார்த்தியால் எழுந்து ஓட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆயுதப்படை போலீசார் ஓடி சென்று அவரை பிடித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து கார்த்தியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கார்த்தி மீண்டும் தப்பி செல்லாமல் இருக்க மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.