பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
- பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்
- முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்
- தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்
- நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதற்கு கண்டனம்
- பள்ளிகளில் நடைபெறும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு பெண் காவலர்கள் நியமிக்க வேண்டும்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையையும், தினக் கூலியையும் அதிகரிக்க வேண்டும்
- தமிழ்நாட்டில் பெண் கல்வி அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவிகள் கல்வி பெற கூடுதல் மகளிர் பல்கலைக் கழகங்கள் உருவாக்க வேண்டும்
- தமிழ்நாட்டில் நடுத்தர குடும்பத்துப் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் கொடுமைகள் அதிகரித்து வருவதால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்
- வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
- தமிழ்நாட்டின் காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட வேண்டும்
- பூம்புகார் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.