பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டண உயர்வே பெரிய காரணம்: வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் குற்றச்சாட்டு
வேலூர்: விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டண உயர்வு தான் பெரிய காரணம் என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வேலூரில் நேற்று அளித்த பேட்டி: சாமானிய வணிகர்களை பாதுகாக்க திருச்சியில் 30ம் தேதி நடக்க உள்ள போராட்டத்தில், பல ஆயிரக்கணக்கான வணிகர்கள் திரண்டுவர உள்ளனர். மாநிலத்திற்கு உட்பட்ட அனைத்து வணிகர்களையும் பாதுகாக்க தமிழ்நாடு முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம்.
இப்போது 27 சதவீதம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனர். தமிழ்நாடு முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளோம். ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. வணிகர்களின் வாழ்வாதாரத்தை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்க பொருட்கள் விற்பனை செய்ய மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் 100 கடைகள் திறந்தால் தமிழ்நாட்டில் உள்ள 27 லட்சம் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
விதிமுறைகளை மீறி இந்த கடைகள் செயல்படுகிறது. வணிகர் சங்க பேரமைப்பு ஒருமுறைவரியாக்க கேட்டோம். இருமுறை வரியாக விதிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். சட்டங்களை எளிமையாக்க வலியுறுத்த உள்ளோம். விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டணம் உயர்வு தான் பெரிய காரணம். இந்த வரியினால் பொருட்கள் விலையேற்றம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரதமர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த டோல்களை அகற்றப்படும் என்றார். நிதின்கட்கரி கூட டோல்கள் அகற்றப்படும் என்றார். ஆனால் அகற்றப்படவில்லை. தனிநபர்கள் வளர்ச்சிக்காக அந்த டோல்கள் செயல்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலைவாசி குறையும். ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.