பெருந்துறை அருகே 37 ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்த தடை: சிப்காட் ஆலை கழிவுகளால் மாசடைந்த நிலத்தடி நீர்
ஈரோடு: பெருந்துறை அருகே சிப்காட்டை சுற்றியுள்ள நான்கு ஊராட்சிகளில் 37 ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தடை விதித்திருக்கும் நிலையில், ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சாய ஆலைகள், பிளாஸ்டிக் நிறுவனங்கள், பீங்கான் தொழிற்சாலை என 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர்.
இங்குள்ள பல ஆலைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சட்ட விரோதமாக வெளியேற்றி வரும் ரசாயன கழிவுகளால் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நீர் ஆதாரங்களும், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள எழுதிங்கள் பட்டி, குட்டப்பாளையம், ஈங்கூர் ஆகிய ஊர்களில் தண்ணீரின் நிறம் பல ஆண்டுகளாக மாறியுள்ளன.
இவற்றை குளிப்பதற்கு பயன்படுத்தினாலே உடலரிப்பு, கொப்பளம், தோல் நோய்கள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள், இதற்கிடையே நிலத்தடி நீரின் தர குறித்து ஈங்கூர் முகாசி பிடாரியூர், வாய்ப்பாடி மற்றும் வரப்பாளையம் பகுதியில் சமீபத்தில் குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு நடத்தியது. இதில் 37 ஆழ்குழாய் மற்றும் கிணறுகளின் தண்ணீர் குடிநீராக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அந்த நீரை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முழுமையாக நிலத்தடி நீரை பயன்படுத்துவதை தவிர்க்க கூடுதலாக தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என கேட்கும் மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஆலை கழிவுகளால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வை நடத்த வேண்டும் என்றும் தொழில்நுட்ப ரீதியில் பழைய நிலையில், நிலத்தடி நீரை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். மாசுபட்ட நிலத்தடி நீரை மீட்டெடுப்பதுடன் சுற்றுச்சுழல் விதிகளை பின்பற்றாத ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.