பெரியார் பிறந்த நாளில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடத்த வேண்டும் திமுக தலைமை அறிவிப்பு
சென்னை: திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17ம்தேதி) காலை 10.30 மணி அளவில், அந்தந்த மாவட்ட திமுக அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்வரும், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென அனைத்து மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் சிலை முன்பு, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். சமூகநீதி நாள் உறுதிமொழி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும் - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும், பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.