பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு!
சென்னை: போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு , ஆகியோர் பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு , திரு.வி.க நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (29.10.2025) போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74, கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள பெரம்பூர் போக்குவரத்து பணிமனை வளாகப் பகுதி முழுவதும் நடந்து சென்று பார்வையிட்டு, பணிமனையில் வடகிழக்குப் பருவமழையின் போது மழைநீர் தங்குதடையின்றி செல்வது, அடிப்படை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக போக்குவரத்துத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், வருவாய்த்துறை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகளின் அலுவலர்களுடன் கலந்துரையாடி பணிகளை விரைவில் தொடங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
பின்னர், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் / சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் ஆகியோர் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு- 74, கிருஷ்ணதாஸ் சாலை அருகே காலியாக உள்ள டான்சிக்கு சொந்தமான இடத்தை நேரில் பார்வையிட்டு, அவ்விடத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் / சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் , திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76, பெரம்பூர், மங்களபுரம், குளக்கரை சாலையில் மழை மற்றும் வாகனப் போக்குவரத்தால் சேதமடைந்த கழிவுநீர் செல்லும் கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சீரமைத்திட சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-74, கிருஷ்ணதாஸ் சாலை, 4வது தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் புதியதாக கட்டப்பட்டு வரும் சென்னை தொடக்கப்பள்ளியின் கட்டடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியிலேயே செயல்பட்டு வரும் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு மற்றும் குழந்தைகளுக்கு செவிலியர்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76, செல்லப்பா தெரு, கொசப்பேட்டையில் உள்ள பட்டேல் பூங்காவினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் / சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் பார்வையிட்டு பூங்காவினை தூய்மையாகப் பராமரித்திடவும் பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காதவாறு உடனுக்குடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பூங்காவில் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-76, கொசப்பேட்டை செல்லப்பா தெருவில் செயல்பட்டு வரும் சென்னை தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு பழைய பள்ளி கட்டடத்தை பாதுகாப்பாக இடித்து அகற்றுவது தொடர்பாகவும், அந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவது தொடர்பாகவும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து வார்டு-76, பொன்னியம்மன் கோயில் 2வது தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பு மிக பழமை வாய்ந்து இருப்பதால், அக்குடியிருப்பு கட்டடத்தை பாதுகாப்பாக இடித்து அகற்றுவது தொடர்பாகவும் அக்குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது குறித்து குடியிருப்புவாசிகள் மற்றும் அலுவலர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
பின்னர், வார்டு-75, பிரிக்ளின் சாலை, எஸ்.எஸ்.புரம் சந்திப்பு பகுதியில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மழைக்கால மருத்துவ சேவைகளை பார்வையிட்டார். பின்னர், 10 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் 12 மருத்துவ பயனாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினையும் வழங்கினார். மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்து, மாத்திரைகளுடன், ரொட்டி, பால், பிஸ்கெட், பழங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது, மேயர் ஆர்.பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் எல். ரமணி, எஸ். தமிழ்செல்வி, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இணை இயக்குநர் சுந்தர பாண்டியன், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் சு. கீதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.