பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 7 பெண்களுக்கு மூச்சுத்திணறல்
பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணிக்காக 50க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். இதில் பரமேஷ்வரி, சசிகலா, மாலதி, இந்துஜா, செட்டியம்மாள், மாரியம்மாள், லட்சுமி, சவீதா, சுதா, கலாவதி, மகாலட்சுமி ஆகியோர் நேற்று மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இவர்களில் சசிகலா, லட்சுமி, பரமேஸ்வரி, கலாவதி ஆகியோர் இரண்டாவது மாடியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்தனர். அப்போது கெமிக்கல் மருந்தை ஊற்றி சுத்தம் செய்தபோது திடீரென அறுவை சிகிச்சை அரங்கம் முழுவதும் லேசான புகை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் 4 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
4 பேரும் சத்தம் போட்டனர். இதனால் அரங்குக்கு வெளியே இருந்த பணியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக 7 பேரும் உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், வழக்கமாக பயன்படுத்தும் கெமிக்கல் மருந்து தான் அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஏன் இவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். யாருக்கும் பாதிப்பு இல்லை. லேசான கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் மட்டுமே ஏற்பட்டது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் உள்ளனர். அச்சப்பட தேவையில்லை என்றனர்.