தென்மாவட்ட பயணிகளின் ‘தண்டவாள தேர்’ வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயது 48: கேக் வெட்டி பயணிகள் உற்சாகம்
மதுரை: மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் காலையில் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இதன் 48வது ஆண்டு இயக்க நாள் விழா மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 15.8.1977ல் மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் இயங்கத் தொடங்கியது. காலை நேரத்தில் சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்பட்டதால் இடையில் உள்ள திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மாவட்ட பயணிகளுக்கான தண்டவாள தேர் என்றும் குறிப்பிடுவதுண்டு. மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை சென்றடையும். அதாவது 7.30 மணி நேரத்தில் சென்னையை சென்றடைகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்துசேர்கிறது.
இரு மார்க்கத்திலும் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. முன்பு பயண நேரம் 7.50 மணி நேரமாக இருந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிட நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
48வது ஆண்டு இயக்கநாளையொட்டி நேற்று மதுரை ரயில் நிலைய சந்திப்பின் 4வது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இன்ஜின் முன் நின்று கேக் வெட்டி கொண்டாடினர். லோகோ பைலட்கள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில்வே ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ரயில் முன் நின்று புகைப்படம், செல்பி எடுத்துக்கொண்டனர்.