பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையம்-சிறுசேரிக்கு புதிய ஏசி மின்சார பேருந்துகள் இயக்கம்: விமான பயணிகள் வரவேற்பு, பல வழித்தடங்களில் இயக்க கோரிக்கை
சென்னை: பயணிகள் வசதிக்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர் போக்குவரத்து கழகம் சிறுசேரிக்கு புதிதாக குளிர்சாதன மின்சார பேருந்துகளை இயக்குகிறது. விமான நிலையம்-சிறுசேரி இடையே எம்ஏஏ 2 என்ற வழித்தடத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம், கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதியில் இருந்து விமான பயணிகளின் வசதிக்காக, சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம்-அக்கரை ஆகிய இரண்டு வழித்தடங்களில், மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த பேருந்துகள் விமான பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து மேலும் பல்வேறு வழித்தடங்களுக்கு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் தரப்பில், தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிறுசேரி தொழிற்பேட்டைக்கு, புதிதாக குளிர்சாதன மின் பேருந்துகளை, மாநகர போக்குவரத்து கழகம் இயக்க தொடங்கியுள்ளது.
இந்த மாநகர குளிர்சாதன மின் பேருந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பல்லாவரம், பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை வழியாக சிறுசேரி செல்கிறது. முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட இந்த மின் பேருந்துகள், விமான பயணிகளின் பயணத்தை மேலும் சொகுசாக்குவதோடு, சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்த புதிய குளிர்சாதன மின் பேருந்துகள் இயக்கப்படுவதை, விமான பயணிகள் வரவேற்பதோடு தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறுசேரிக்கு மட்டும் குளிர்சாதன மின் பேருந்துகள் இயக்கப்படுவதை மேலும் அதிகரித்து, பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும் என்றனர்.