நாடாளுமன்ற கூட்டத்தை திட்டமிட்டு சீர்குலைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல: மக்களவை சபாநாயகர் அறிவுரை
கோஹிமா: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 15 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பிரச்னை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி செய்தனர். இதனால் கிட்டத்தட்ட முழு கூட்டத்தொடரும் முடங்கியது.
தற்போது தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடப்பதால் குளிர்கால கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:அரசாங்கம் செய்ய திட்டமிட்டுள்ள அலுவல்களை பொறுத்து கூட்டத்தொடரின் கால அளவை தீர்மானிக்கிறது. அவையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்க நாங்கள் முயற்சி செய்வோம். நாடாளுமன்றம் என்பது மக்களின் பிரச்னைகளை எழுப்புவதற்கான ஒரு மன்றம். அரசியல் கட்சிகள் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக அதை திறம்பட பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் அவைக்கு உள்ளே பிரச்னைகளை எழுப்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவைக்கு வெளியில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.