பாளை. சீனிவாசாநகர் ரவுண்டானாவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
*தூய்மை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு
நெல்லை : நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா நேற்று பாளையங்கோட்டை மண்டலம் வார்டு 38 சீனிவாசாநகர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். தச்சநல்லூர் மண்டலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடடிக்கையாக சந்திமறித்தம்மன் கோயில் முன்பு சுகாதார பிரிவு சார்பில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
மழைக்கால பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி நேற்று மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில், பாளை மண்டலம் வார்டு 35 தெற்கு விநாயகர் கோவில் தெரு, தெற்கு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, தெற்கு பஜார், நெல்லை மண்டலம் வார்டு 15 ஜெபஸ்தியார் கோயில் தெரு, சாலியர் தெரு, கண்டியபேரி கால்வாய் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தச்சநல்லூர் மண்டலம் வார்டு 1 மதுரை பைபாஸ் ரோடு, வார்டு 3 மணிமூர்த்திஸ்வரம் வாழ வந்த அம்மன் கோயில் தெரு, வார்டு 12 ரெங்கநாதன் மாநகராட்சி பள்ளி, மேலப்பாளையம் மண்டலம் வார்டு 41 அன்புநகர், 42 எஸ்டிசி மெயின்ரோடு, வார்டு 43 வீரமாணிக்கபுரம் மேல தெரு பகுதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநகராட்சி அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் கொண்டு, கழிவுநீரேடை தூர்வாருதல், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு கணக்கிடுதல். மழைநீர் ஓடையில் தேங்கிய குப்பைகள் அகற்றி மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.