பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு: 30 பேர் காயம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் பாகிஸ்தானின் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு, பேரணி ஒன்று நடந்தது. பேரணியில் பங்கேற்ற மக்கள் அனைவரும் வீடு வீடு திரும்ப தயாரான போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடந்தது. மக்கள் கூடியிருந்த பகுதியில் குண்டு வெடித்ததில், 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில், பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன், அக்தர் மெங்கல், பாதுகாப்பாக தப்பினார். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு துணை ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஆறு பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.