பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் குண்டடிப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் நலம் பெற்ற டாக்டர் பரமேஸ்வரன்: குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்து நன்றி
சென்னை: ஜம்முவின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் குண்டடிப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, “அவரது மருத்துவ மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார்.
அத்துடன், டெல்லி சென்றிருந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியினால் நடந்த சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று டாக்டர் ஏ.பரமேஸ்வரன் இல்லம் திரும்பினார்.
இந்நிலையில் இல்லம் திரும்பிய டாக்டர் ஏ.பரமேஸ்வரனும், அவர் குடும்பத்தாருமான அவரது துணைவியார் டாக்டர் நயன்தாரா, தந்தை பி.ஆறுமுகம், மாமனார் டாக்டர் டி.கே.மணிகுமார், மாமியார் டாக்டர் ஜெ.சித்ரா, மாமன் டாக்டர் வேதாந்த சீனிவாசன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, திமுக விவசாய அணிச் செயலாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.